April 27, 2024

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணியின் அடாவடிக்கு வாய்ப்பூட்டு! மாவை…..

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரொருவர் எதிர்வரும் காலங்களில் தேசிய பட்டியல் உறுப்பினர் மற்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கு தாமே வேட்பாளர்களை நியமிப்பதான கருத்தை முன்னிலைப்படுத்தி சட்டத்தரணி ஒருவர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்களிடம் உறுதிமொழியை வழங்குவதாக தொகுதிக்கிளையின் தலைவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையிடம் முறையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மாவை சேனாதிராஜா, குறித்த முறைப்பாட்டாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

மாவட்ட உறுப்பினர்கள், நான் உட்பட வேட்பாளர் தெரிவுக்குழு சிபாரிசின் அடிப்படையிலே எதிர்காலத்தில் மேற்குறித்த தேசியப்பட்டியல் மற்றும் மாகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேற் குறித்த சட்டத்தரணி தனது தொகுதியில் மாத்திரம் ஏழு தனி நபர்களிற்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக போலி வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் கட்சியின் தலைவரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் முக்கிய நிருவாகிகளின் அருகில் குறித்த சட்டத்தரணியின் ஒற்றர்கள் ஊடுருவி பல இரகசியத் தகவல்களை தினம் இரவு 10.30மணியளவில் தொலைபேசி வாயிலாக பகிரப்படுவதாக ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வாறு ஒற்றர் வேலை பார்ப்பவர்கள் பல பையிகளில் முக்கிய கடிதங்களை அகற்றி குறித்த சட்டத்தரணியிடம் சமர்ப்பித்துள்ளதையும் கட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த காலங்களை போன்று தனி நபர்களினதோ, தனி மனிதர்களினதோ விருப்பத்தின் பேரில் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன் மக்களின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்தவர்களே எதிர்காலத்தில் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்களே அன்றி தமிழ் மக்களுடன் தொடர்பில்லாத எவரும் எதிர்காலத்தில் எந்தவொரு பதவியிலும் அமர்த்தப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்ததாக தமிழரசு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.