April 23, 2024

யாழில் குப்பைக்குள் கிடந்த வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் கைது..!

யாழில் குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


கீரிமலை கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்துள்ளனர். அதனை வெட்டி நெருப்பு வைத்த போது அது வெடித்துள்ளது.


அதன்போது மூவரின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக வெடிபொருளை வெடிக்க வைத்ததுடன், அதன் பின்னர் ஓடி ஒழித்தனர்.

அதனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது நால்வரும் கைது செய்யப்பட்டனர்.


அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப் படுவார்கள் என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.