April 26, 2024

பாடசாலைகள் தொடர்ந்து மூடல்:பரிசோதகர்கள் வெளியேறல்

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மக்கள் இன்னல்களை சந்திக்காமலிருப்பதற்காக, பொதுச்சுகாதார பரிசோதர்களிற்கு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதனிடையே பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை பாடசாலைகளை மூடிவைத்திருக்குமாறு கல்வியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல்கள் நிறைவடைந்திருக்கும், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு கருதுவதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது