Mai 8, 2024

வடமாகாணசபை வாகனங்களையும் காணோம்!

இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திற்கென வடக்கிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தமது கதிரைகளை தக்கவைக்க முன்னாள் வடமாகாண ஆளுநர்கள் வடமாகாணசபைக்கு சொந்தமான பல கோடி பெறுமதியான வாகனங்களை கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விடுவித்திருந்தனர்.

இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாத காரணத்தினால், அவற்றின் பெறுமதியைக் கண்டறிய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் முறையான முறைக்கு புறம்பாக ஏனைய அரச நிறுவனங்கள், கோவில்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் 27 வாகனங்களுக்கு மட்டுமே பராமரிப்பு செலவாக 13 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி அலுவலகம் செலவிட்டுள்ளது.

அது தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் ஜனாதிபதி செயலகத்திடம் பல தடவைகள் வினவிய போதும் முறையான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert