Mai 20, 2024

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது தொடர்பான வரைவுகளை இவ்வருட இறுதிக்குள் தயாரிக்குமாறு உரிய அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கங்கள் மாறினாலும், கொள்கைகளை நிலையாகப் பேணுவது அவசியமானது என்றும், காலத்திற்கு காலம் மாறும் கொள்கைகளால் ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுக நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான கட்டமைப்பு, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

நாட்டில் செயற்திறனான நிர்வாகத்தை ஸ்தாபிப்பதில் ஒரு முக்கியமான தருணத்தை குறிக்கும் வகையில், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய மதிப்பீட்டுக் கொள்கை அமுலாக்க வரைவை வெளியிடும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

தேசிய மதிப்பீட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிதி அமைச்சு மற்றும் திட்ட முகாமைத்துவத் திணைக்களத்துக்கு முக்கிய பொறுப்பு உள்ளது. அரச கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தி, மூன்று மொழிகளிலும் இந்தப் புதிய கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசாங்கத்தின் அதிக செலவீனங்களைக் கொண்ட பத்து அமைச்சுகளின் செலவுகள் குறித்த பகுப்பாய்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த வருட இறுதிக்குள் வெளிவிவகாரக் கொள்கை வரைவைத் தயாரிக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன். அத்துடன், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நீண்டகாலமாக அவதானத்தைப் பெற்றுவந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அமைச்சுக்கள் மட்டத்தில் தேசிய கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது அவசியமானது. அது திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்கவும் உதவியாக அமையும்.

அரசாங்க நடவடிக்கைகள் தொடர்பில் வலுவான மதிப்பீடு மிகவும் முக்கியமானது. தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை வலுவாக நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம்.

இந்த தேசிய கொள்கைகளுடன் முன்னோக்கி செல்லும் வழியை திட்டமிடும் தருணத்தில் கடன் நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்கரமாக அமைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. இதன்போது, அரச நிதிக் குழு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் சிக்கல்களுக்கு மத்தியில் குறிப்பிடத்தக்க இணக்கப்பாடுகளை எட்டவும் முடிந்துள்ளது.” என்றும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert