April 27, 2024

துயர் பகிர்தல் உத்தமபுத்திரன் முத்தையா

ஆழ்ந்த இரங்கல்
அமரர்.உத்தமபுத்திரன் முத்தையா
08.08.20
பேர்லின் பதியில் நீண்டகாலமாக வசித்து வந்தவரும், பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட மூத்த தொண்டர்களில் ஒருவருமான அமரர்.உத்தமபுத்திரன் அவர்கள் 08.08.20 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

நெற்றி நிறைய விபூதிப் பூச்சுடன் ஞானப்பழமாய் தோற்றமளிக்கும் இவர் யாரைக் கண்டாலும் முதலில் கேட்பது „எப்படி சுகமாய் இருக்கிறீர்களா? என்று.
தொழினுட்ப வசதிகள் குன்றிய காலத்திலும் கணனி அலுவல்களில் வல்லவராய் விளங்கி எமது ஆலயத்திற்குப் பணிகள் பல புரிந்தவர்.
தளர்ந்த வயதிலும் எம்பெருமானைத் தோளில் கொள்ளை ஆசையுடன் தாங்கிச் செல்வார். இறுதியாக 28.07.20 ஆடிச்செவ்வாய் அன்று எமது ஆலயத்திற்கு வருகை தந்து நகைச்சுவையாகப் பேசிவிட்டுச் சென்றார். பெயரிற்குத் தகுந்தாற் வாழ்ந்த பக்தி உள்ளம் இறைவனின் பாதங்களை நிரந்தரமாய்ப் பற்றிக் கொண்டது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு,ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.?
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க….
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க…..
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க….
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க…..

ஜனமும் பூமியில் புதியது இல்லை….
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை…
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை…
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை….

பாசம் உலாவிய கண்களும் எங்கே….
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே….
தேசம் அளாவிய கால்களும் எங்கே….
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே…..

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக….
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க….
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக….
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க….

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை…..
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை….
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை….
மறதியைப் போலொரு மாமருந்தில்லை….

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை….
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை….
நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன…..

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்…..
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்……
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்….
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்….

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்…..
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்….
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர் கதையாகும்….

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்….
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்….
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்….
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்…..

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க….
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க்க….
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க்க….
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க்க….
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி