April 28, 2024

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, எங்களுடைய இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என்றும் தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் வலியுறுத்தினார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.