April 27, 2024

யாழ் மாவட்டத்தை விட்டுச் சென்ற மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது.

இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போது வரை வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியமராத குடும்பங்களின் விவரங்கள் அவர்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகங்களினால் திரட்டப்பட்டு வருகின்றன.

எனவே இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமராத மக்கள் தங்கள் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு, தங்களுடைய பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.