கைக்குண்டுடன் விளையாடிய சிறுவர்கள் படுகாயம்!
![](https://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2020/10/template-16.png)
மன்னார் இரணை இலுப்பைக்குளப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.இன்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது பாட்டியுடன் சென்ற இரு சிறுவர்களும் மரம் ஒன்றின் அருகில் நின்று விளையாடிக் கொண்டு நின்றுள்ளனர்.
மரத்தின் அடியில் மண்ணில் புதையுண்டு கிடந்த கைக்குண்டு ஒன்றை எடுத்த சிறுவர்கள் அதனை தட்டி விளையாடிய போது அது வெடித்து சிதறியது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் இரணை இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த 13 வயது மற்றும் 11 வயது சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இரு சிறுவர்களும் வவுனியா மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
போர் காலத்தில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.