யாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..!!

யாழ்.வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வெளியிட்ட தகவல்..!!

நாட்டில் கொரோனா நோய் பரம்பலை கட்டுப்படுத்த அதிகளவில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று ஒரு பூகோளபரம்பல் தொற்றுநோயாகும் இதன் தொற்று வீதம் சாதாரண தொற்று நோய்களை விட மிகவும் அதிகமாகவுள்ளது இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்த நோயாளிகளை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தல் அவசியமானது இதற்கு PCR பரிசோதனை உதவுகின்றது.

நோய் தொற்றினை கண்டறியும் PCR பரிசோதனை வீதத்தை அதிகரித்தால் மாத்திரமே நாட்டில் கொரோனா நோயினை கட்டுப்படுத்த முடியும் இதற்கு நோய் பரவுகின்ற வழிமுறைகளைக் கண்டறிந்து PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 மடங்காக அதிகரிக்கும் போது PCR பரிசோதனைகளினை இன்னும் இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.

அவ்வகையில் இலங்கையில் PCR ஆய்வுகூடங்கள் மேலும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் PCR முடிவுகளே தனிமைப்படுத்தல்களை ஏற்படுத்த, சமூகமுடக்கத்தினை ஏற்படுத்த உதவுகின்றது.

அதேபோல PCR முடிவுகளின் அடிப்படையிலேயே நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் போது அங்கு ஆய்வுகூட பரிசோதனைகள் கட்டாயமாக இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால்,

1.கட்டாயமாக நாம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் இது பொதுவாக நோய் அறிகுறி இல்லாத சாதாரண மக்களையும் கிருமிதோற்றாமல் தடுக்கும்.

2.கைகளை கிருமி தொற்று நீக்கிகளை பாவித்து நன்றாக கழுவ வேண்டும்.

3.பொது இடங்களில் சமூக இடைவெளி பேணுதல் வேண்டும்.

4.பொது போக்குவரத்தினை இயன்றவரை தவிர்த்தல் வேண்டும் இதனால் கொரோனா தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும்.

5.அவசியமற்ற ஒன்று கூடல்களை தவிர்த்தல் வேண்டும்

6. தூர இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் பல இடங்களுக்குக் கிருமியைகொண்டு செல்வதை தவிர்க்க முடியும்.

இதனை கடை பிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதைக்குறைக்க முடியும். இவற்றினை விட கோரனா பரிசோதனையாகிய PCR பரிசோதனையினை இரட்டிப்பாக மேற்கொள்வதன் மூலம் சமூகத்தில் கொரோனா நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

இன்னும் 20 வருடங்களுக்கு இந்த கொரோனா நோய்க்கிருமி எமது சமூகத்தில் காணப்படும் எனவே நாங்கள் பயன்படுத்தும் முககவசங்களை சாதாரண குப்பைகளில் போடுதல் அல்லது தெருக்களில் வீசுதல் தவறானது. ஏனெனில் யாழில் மக்கள் தாங்கள் பயன்படுத்திய முக கவசங்களினை ஏனையகழிவுகளுடன் கொட்டுவதனை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இந்த முக கவசங்களிலிருந்து கிருமி கடத்தப்படலாம் எனவே கொரோனா நோயாளிகள் அல்லது பொதுமக்கள் பாவிக்கின்ற முககவசங்களை பொது இடங்களில்,சாதாரண குப்பைகளோடு போடுவது தவிர்க்கப்பட வேண்டியதாகும் இது சாதாரண மிருகங்களின் மூலம் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த விடயங்களை மக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.