April 26, 2024

தமிழகத்தில் மேலும் பொதுமுடக்கம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்!

வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று ஆலோசனை நடத்தினார்.

முதலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தற்போது இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, இ- பாஸ் (E-Pass), பொது போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசித்தார் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை (Coronavirus) கட்டுப்படுத்த மார்ச் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஊரடங்கு வீதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏழாம் கட்ட ஊரடங்கு (Lockdown) முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர் 1) முதல் 8 ஆம் கட்ட ஊரடங்கு அமல் செய்யப்படும் எனவும், அதில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.