April 26, 2024

சுமந்திரனிற்கு போதாத காலமா?; தமிழ் அரசு கட்சியும் வைக்கிறது ஆப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மாற்றப்படவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியும் அவரை தூக்கியெறிகிறது.

நாளை நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் புதிய பேச்சாளர் ஒருவரை நியமிக்கும் புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இதுவரை செயற்பட்டு வந்தவர் எம்.ஏ.சுமந்திரன். அவரது வில்லங்கமான பல கருத்துக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரிவிற்கு காரணமாக அமைந்தது. அண்மையில் நடந்த கட்சி தலைவர்கள் சந்திப்பில், இரா.சம்பந்தனும் அதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் கட்சியின் புதிய பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதென கொள்கையளவில், கட்சி தலைவர் இணக்கம் கண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக செயற்பட்டு வந்த எம்.ஏ.சுமந்திரன், தன்னை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளராகவும் அடையாளப்படுத்தி வந்தார். ஆனால், இதுவரை தமிழ் அரசு கட்சியில் பேச்சாளர் என யாரும் நியமிக்கப்படவில்லை. அப்படியொரு பொறுப்பும் கிடையாது. இதனை எம்.ஏ.சுமந்திரன் வாய்ப்பாக பயன்படுத்தி வருவதை நிறுத்த, தமிழ் அரசு கட்சி புதிய நகர்வை ஆரம்பித்துள்ளது.

நாளைய மத்தியகுழு கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் புதிய பேச்சாளர் பொறுப்பிற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.