Mai 2, 2024

செந்திலை பிரிக்க சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது.

மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமான் கண்ட கனவுகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கடுமையாக உழைக்கும்.

இவ்வாறு இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சூரியன் வானொலியில் இன்று ஒலிபரப்பாகிய விழுதுகள் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

செந்தில் தொண்டமானுக்கும், எனக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. அவ்வாறு வெளியாகும் தகவல்கள் தவறானவை. இருக்கின்ற ஒற்றுமையை உடைப்பதற்காகவே இப்படியான கருத்துகள் பரப்படுகின்றன.

தலைவரின் மறைவின் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜிடமே அதிகாரங்கள் இருக்கின்றன. யாப்பின் பிரகாரமே நாம் பயணிக்கின்றோம்.

கட்சிக்கான புதிய தலைவர் மூன்று மாதங்களுக்குள், அல்லது ஒரு வருடத்துக்குள், ஏன் மூன்று நாட்களுக்குள்கூட நியமிக்கப்படலாம்.

இ.தொ.காவின் தலைமைப்பதவிக்கு தொண்டமான் பரம்பரையை சேர்ந்த ஒருவர்தான் வரவேண்டும் என்றில்லை. அது கட்சி எடுக்கும் முடிவாகும்.

அரசியலுக்குள் மலையக இளைஞர்கள் வரவேண்டும். மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியும். தலைமைப்பதவி என்பது எனது இலக்கு அல்ல. மக்களுக்கு சேவையாற்றவேண்டும். என்றார்.