Mai 3, 2024

ஆனைவிழுந்தான் வயல் காணிகளை மீட்க நடவடிக்கை தொடரும்….

கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஆணை விழுந்தான் பிரதேச மக்களின் வயல்க்காணி தொடர்பில் குறித்த பிரதேச மக்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

குறித்த பகுதியில் 1984ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்களிற்கு தலா இரண்டு ஏக்கர் நெற்செய்கை காணியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அப்போதைய அரசாங்கத்தினால் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த மக்களால் தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக காணியை பராமரிக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் குறித்த காணி பெரும் மரங்கள் வளர்ந்து காணப்படும் நிலையில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டு கிராம மக்களுக்கு இடையூறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குறித்த காணியில் வன பகுதி என காண்பிக்கப்படும் பகுதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் அங்கு காணப்படும் நிலையில் குறித்த காணியை விடுவிக்காது வனவள பாதுகாப்பு திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இந்த காணிகளை மக்களுக்கு வழங்கவேண்டும் என பல தீர்மானங்கள் எம்மால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் நாட்டின் நிலவும் அசாதாரண நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் குறித்த இந்தகாணி விடுவிப்பு தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற சந்திப்பில் என்னால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுதொடர்பான தீர்வு கிடைக்குமென பிரதமரால் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரதமருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை நாமும் தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருப்போம் என்றார்.

குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினரை அனைத்து பகுதிகளையும் மக்கள் பார்வையிட அழைத்துச் சென்றனர்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பிரதேச சபையின் உறுப்பினர்களான செல்வநாயகம், ஜீவராசா, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.