Mai 7, 2024

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் ” யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது.

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும் ஒன்றுபட்டு தமிழனத்துக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை கண்டிப்பதுடன், எமது நியாயமான கோரிக்கைகளை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்த வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

1)அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள அமைக்கப்படவேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய அரசிதழ் இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3)இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின்  மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை  உறுதிப்படுத்த வேண்டும்.

5)போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பெரும் குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

ஆகிய முதன்மை கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert