April 27, 2024

கண்டுபிடிக்க 20 ஆவணங்கள் வேண்டுமாம்!

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டு;ம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் 20 ஆவணங்களை சமர்ப்பித்தாலே காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கமுடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதை உறுதிசெய்கின்றோம்,என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போதுமானவையல்ல என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட கடிதத்தில் புள்ளியிடப்படாத ஆவணங்களை கோருகின்றோம் அவற்றை மாத்திரம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை வாகனச்சாரதி அனுமதிப்பத்திரம்- காணாமல்போனவரின் அடையாள அட்டை இலக்கம்,பிறப்பு அத்தாட்சி பத்திரம், உட்பட 20 ஆவணங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர் என அவர்களது குடும்பத்தினரை ஏற்கச்செய்யும் மரணச்சான்றிதழ்களை காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அரசாங்கம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வரும் நிலையிலேயே 20 ஆவணங்களை காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் கோரியுள்ளது.

மரணச்சான்றிதழ்களை உறவினர்கள் ஏற்றுக்கொண்டால், குறிப்பிட்ட நபர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்து அவரை தேடும் நடவடிக்கைகளை நிறுத்தலாம் மேலும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளையும் கைவிடலாம்.