Mai 6, 2024

தமிழர் வரலாற்றை காத்த புலிகளும் அழிக்கும் பேரினவாதமும்

“யாழ்ப்பாண நூலக அழிப்பின் பின்னர் ஈழத்தமிழர்களின் எஞ்சியிருந்த வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் பணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர்” என அரசியல், பொருளியல் ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

யாழ் நூலக எரிப்பின் நாற்பதாண்டு நினைவுகளை சுமந்து, பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் “தடம்” அமைப்பினால் நடத்தப்பட்ட இணையவழி ஒன்றுகூடலில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நடைமுறை அரசு வன்னிப்பெருநிலப்பரப்பில் இயங்கிய காலப்பகுதியில், அங்கு பெருமளவான ஆவணத்திரட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.

விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு பிரிவும், படையணியும் தனித்தனியாக நூலகங்களை கொண்டிருந்தன. இந்த ஆவணக்காப்பகங்களில் தமிழரின் வரலாற்றுப் பெறுமதி மிக்க ஆவணங்கள் சேகரிக்கப் பட்டிருந்தன. 2009 இறுதி யுத்தத்தின் போது வன்னியில் இருந்த 146 000 தமிழர்களுடன் இந்த வரலாற்று ஆவணங்களும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.