Mai 9, 2024

அரசாங்கத்தை விமர்சிக்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள ‘சுதந்திரம்’

இலங்கைப் பாராளுமன்றத்தின் தற்போதைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாச பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் பாதகமான செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதே வேளை அரசாங்கத்தையும் ஜனாதிபதி கோட்டாபாயவையும் விமர்சனம் செய்யும் ‘சுதந்திரத்தை’ தனது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளாரா என்று நினைக்கும் அளவிற்கு கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார்கள் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கேசா விதானகே அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது பின்வருமாறு தெரிவித்தார்

எரிபொருள் விலை அதிகரிப்பு, உரம் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பவற்றோடு கொவிட் தொற்றின் காரணமாக நாடு இன்று பாரதூரமான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. உரப்பற்றாக்குறையால் தாம் விவசாயத்தை கைவிடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளார். அவ்வாறு விவசாயம் கைவிடப்படுமாயின் நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படும்.

அரிசி மாத்திரமின்றி பாரியளவில் டொலர் வருமானத்தை ஈட்டித்தரும் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்படும். தேயிலை தூள் ஏற்றுமதி குறைவடையுமாயின் அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அரசாங்கம் தற்போது செயற்படும் முறைமை தொடருமாயின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் மரவள்ளி கிழங்கை அவித்து உட்கொண்ட யுகத்திற்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நினைவுபடுத்துகின்றோம். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என்றார்.