Mai 7, 2024

கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் அதிரடிக் கைது!

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 38 பேரை அம்மாநில பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை மேலும் 23 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் இருந்து இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதாக அம்மாநில பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட கர்நாடக பொலிசார், மங்களூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 38 பேரை கைது செய்தனர். இதேபோல், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் 23 பேரை தமிழ்நாட்டு பொலிசார் கைது செய்தனர்.

ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர் குறித்து கர்நாடக பொலிசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளது தொடர்பான தகவலை கர்நாடக உளவுத்துறையினர் மங்களூர் பொலிசாருக்கு அளித்தனர்.

அதன் பேரில், விடுதி ஒன்றில் காவல் ஆணையர் சசிகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்ட பொலிசார், சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தமிழர்களை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் படகுகள் மூலம் இலங்கையில் இருந்து தூத்துக்குடி வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து சரக்கு கப்பலில் கனடாவுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது திட்டம் தாமதமானது. எனவே, அவர்கள் விடுதியில் தங்கியிருந்து கனடாவுக்கு செல்ல சரியான நேரத்திற்காக காத்துகொண்டிருந்தனர்.

இது தொடர்பான தகவல் கர்நாடக மற்றும் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் பொலிசாரை உஷார் படுத்தியுள்ளனர். அதன் பேரிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கனடா செல்வதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 6 லட்சம் இந்திய ரூபாய் கட்டணம் பேசப்பட்டுள்ளது. இதில் ஒரு தொகை முன்பணமாக இலங்கையிலேயே பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக இருந்த இந்தியர் ஒருவரையும் மங்களூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.