Mai 19, 2024

தாக்க முற்பட்ட படையினர்:தமிழ் இளைஞர்கள் கைது!

யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரைத் தென்னிலங்கையிலிருந்து கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த வ.வேலாயுதம் (வயது-70) எனும் விவசாயியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மாலை-05 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன. இதனால், பேருந்து சேதமடைந்த நிலையில் பேருந்தில் பாதுகாப்புக்குப் பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டமையால் குழப்பநிலை ஏற்பட்டது.

தென்னிலங்கையிலிருந்து பேருந்துகளில் கோவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டனர். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த விவசாயி ஒருவரைப் பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் விழுந்தார்.

சுயநினைவற்ற நிலையிலிருந்த அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரழைக்கப்பட்டனர். இந்தநிலையில் பேருந்தில் கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நால்வரைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.