Mai 18, 2024

69 இலட்சம் மக்கள் மத்தியில் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்ட கோட்டாபய – சரத் பொன்சேகா

முழு நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டு இவ்வாறு கூறியிருக்கும் அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

1991 ஆம் ஆண்டில் யாழ் கோட்டையை கைப்பற்றும் போராட்டத்தில் நீங்கள் எதிரியை முன்னால் வைத்துக் கொண்டு திறந்த பாதையில் சென்று பாதிக்கப்பட்ட போது உங்களையும் உங்கள் படையையும் நான் உள்ளிட்ட முதலாவது சிங்க படையணியினரே காப்பாற்றினோம்.

இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 இல் அரசியல் அரங்கில் நீங்கள் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தற்போது உங்கள் நிர்வாகமும் கட்டளையும் முழுமையாக சரிவடைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

உங்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்கள் மத்தியில் நகைப்பிற்குள்ளாகும் வகையில் நீங்கள் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.

அதிகாரத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற உங்கள் நிர்வாகம் அதே அதிகாரத்தினால் அழிக்கப்படும்.

எனவே கோட்டாபயவிற்கு நான் கூறும் அறிவுரையாதெனில் , ‘முழு நாடும் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களதும் சகாக்களதும் ஜனநாயக உரிமைகளில் தலையிட்டு பிரச்சினைகளை மேலும் சிக்கலடையச் செய்ய வேண்டாம்’ என்பதேயாகும்.