Mai 10, 2024

சம்பந்தன் விடுத்த முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதம் 14 ஆம் திகதி தீபாவளி பண்டிகை உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள கொரோனா பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா தொற்றால் ஏற்படக் கூடிய உயிராபத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

மேலும் எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளர்கள் ஆகியோரைக் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.