Mai 3, 2024

யாழ்.போதனாவில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோருக்கு நினைவுத் தூபி!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால் உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த விடயம் தொடர்பில் தமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது யாழ்ப்பாண வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன.  வைத்தியசாலைக்கு பல்வேறு நோய் உடையவர்களும் பிரச்சினை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

கொவிட் தாக்கம் குறைந்த நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் கொவிட் சிகிச்சைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளன கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ஆகவே பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் அவர்கள் வைத்தியசாலைகளை நாடவேண்டும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்திய சாலைக்கு வந்து தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதேவேளை அனைவரும் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் தடுப்பூசியினை பெறாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது சிகிச்சைகளுக்கு ஏதாவது வைத்திய தேவைக்காக வர வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரமுடியும் தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை.

அவர்களுக்கும் ஏனையவர்கள் போன்று சகல விதமான சிகிச்சைகளும் மேற் கொள்ளப்படுகின்றது.   குறிப்பாக வயோதிபர்கள் இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாது விடாது தமக்குரிய தடுப்பூசியினை விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.