Mai 2, 2024

அச்சுறுத்தல்:தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால்  நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் சிறீதரன் பா.உ கனடிய தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கான கனடிய தூதுவர் David McKinnon மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கொண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கனடிய தூதுவர் உடனான இந்த கலந்துரையாடல் ஆரோக்கியமாக இருந்தது. இதன்போது தற்போது இருக்கும் அரசாங்கம் தமிழர்களை அரசு இயந்திரத்தால் நசுக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்றும்,

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை சாட்டு வைத்து  தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள்  மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும்  கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்துடன்

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கச்சார்பு இன்றியும் தொடர்ந்தும்  ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் Decide Mckinnon இன் உறுதிமொழியோடு கலந்துரையாடல் சுமுகமாக முடிந்தது எனக் குறிப்பிட்டார்.