Mai 2, 2024

விதவைகளை ஏமாற்றும் கும்பல் மக்களே அவதானம்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று  கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கணவனை இழந்த விதைவை பெண்களின் ஒவ்வொரு  பிள்ளைகளுக்கான 3லட்சம் ரூபா  நிதி குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்துள்ளதாகவும், அந்த நிதி தற்போது திரும்பவுள்ளதால் உடனடியாக 25ஆயிரம் பணத்தை வைப்பிலிடுமாறும் தொலைபேசி மூலம் சொல்லப்பட்டது. இதனையடுத்து வறுமையில் உள்ள அந்த குடும்பத் தலைவியும் பல கஸ்டத்தின் மத்தியில் பணத்தை திரட்டி தனது வங்கி கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் அதே தொலைபேசி இலக்கத்தில் இருந்து மீண்டும் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு தாம் குறிப்பிடும் நெல்லியடி மக்கள் வங்கியில் உள்ள  கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறும் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து அவரும் குறித்த நபரின் கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது அந்த இலக்கம் செயலிழந்துள்ளது. இதனையடுத்து நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்களினால் வைப்பிலிடப்பட்ட கணக்கு இலக்கத்தை பரிசோதித்த போது யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கி கிளையில் நல்லதம்பி நிரோஜினி எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய தொலைபேசி இலக்கத்தை ஆய்வு செய்த போது பிறாடு ஐங்கரன் எனவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பணரீதியாக பல மோசடிகள் இடம்பெற்று வருவதாக பல தரப்பினரும் எச்சரிக்கை விடுக்கின்ற போதிலும்,  சிலர் தமது கஸ்டத்தின் மத்தியில் திடீரென வரும் பணத்தை நம்பி ஏமாற வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.