Mai 3, 2024

மங்களூரு அருகே கொரோனா பயத்தில் தம்பதி தற்கொலை..!

கர்நாடக மாநிலம், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரின் வாட்ஸ்-அப்புக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதில் பேசி இருந்த தம்பதி, தங்களை கொரோனா தொற்று தாக்கி விட்டதாகவும், பிழைப்பதுகடினம் என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளனர். ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ் கமிஷனர் சசிகுமார், தற்கொலை முடிவை கைவிடும்படி தம்பதியிடம் அறிவுறித்தினார்.

அதன்பிறகு அந்த தம்பதியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்க்காத நிலையில் போலீஸ் கமிஷனர், வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிய தம்பதியின் முகவரியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். அவர்கள் மங்களூரு அருகே சித்ராப்புரா பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் – சுவர்ணா தம்பதி என்பதை கண்டுபிடித்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தம்பதி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த ரமேஷ், சுவர்ணா தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லை. மேலும் ஆரம்பத்தில் பிறந்த குழந்தை 13-வது நாளிலேயே உயிரிழந்ததால் புத்திர சோகத்தில் இருந்துள்ளனர்.

மேலும், சுவர்ணாவுக்கு சர்க்கரை வியாதி காரணமாக தினமும் 2 இன்சூலின் ஊசி போட்டு வந்த நிலையில் காய்ச்சல் வந்ததால் கொரோனா என்ற அச்சத்தில் இந்த முடிவை தேடிக் கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் இந்த தம்பதி. மேலும் தங்களது இறுதி சடங்கிற்காக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை வைத்திருந்ததோடு தங்களது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கும்படியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரேதப் பரிசோதனைக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை விடுத்து உயிரை மாய்த்துக் கொள்வது வீணானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.