Mai 5, 2024

24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி – ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் ஆப்கானிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 125 தலிபான்கள் காயமடைந்துள்ளனர் எனவும மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இருதரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் வாபஸ் அறிவிப்பு வெளியான பின், பல்வேறு மாவட்டங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தலிபான்கள் இறங்கியுள்ளனர்.
இதனால், அவர்களை அழிக்க அந்நாட்டு இராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நங்கர்ஹர், லக்மான், கஜ்னி, பக்திகா, கந்தகார், ஜாபுல், ஹெராட், ஜவ்ஜன், சமங்கன், ஃபரியாப், சார்-இ போல், குண்டூஸ், ஹெல்மண்ட், நிம்ரூஸ், பாக்லான் மற்றும் கபீசா உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்களை வேட்டையாடும் பணியில் இராணுவம் ஈடுபட்டது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் 303 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 125 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு இராணுவ அமைச்சம் தெரிவித்துள்ளது.