April 26, 2024

கூட்டமைப்பிற்கு 3 மாவட்டம்; கூட்டணி கட்சிகளின் மூலம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்ற திட்டம்!

பொதுஜன பெரமுன 130 இற்கும் அதிக ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ச தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கே பெரும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் அதில் அரைவாசியைக் கூட பெற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் தொடர்பான இறுதி செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு விளக்கமளித்தபோதே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,

ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதனோடு இணைந்த கட்சிகளுக்கோ ஒரு மாவட்டத்தைக் கூட வெற்றி பெற முடியாது என்பதே எமது கருத்து.

குறிப்பாக யானையோ தொலைபேசியோ ஒரு மாவட்டத்தைக் கூட வெற்றி கொள்ள முடியாமல் போகும். வேறு ஜனாதிபதிகளைப் போலன்றி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஊடகங்களில் அறிக்கை விடுவது அல்லாமல் நேரடியாக மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்றி வருகின்றார்.

அவர் இரவு பகல் பாராது மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றார்.

மக்கள் அதனைக் கருத்திற் கொண்டு அவர் தமது செயற்பாடுகளை சாத்தியமானதாக முன்னெடுத்துச் செல்வதற்காக சிறந்த பெரும்பான்மை பாராளுமன்றத்தை அவருக்கு பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

புதிய அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாட்டுக்கு பொருந்தும் விதத்தில் அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். 1978ம் ஆண்டு உருவாக்கப்ட்ட இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை காலமும் 19 சீர்த்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் தங்களின் தேவைகளுக்காகவும் எதிர் தரப்பினரை பழிவாங்கும் குறுகிய நோக்குடனும் அரசியலமைப்பினை தேவைக்கேற்ப திருத்தியுள்ளது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் முழு அரசியலமைப்பினையும் கேள்விக்குறியாக்கி முத்துறையின் அதிகாரத்தையும் கேள்விக்குற்படுத்தியுள்ளது.

மூல கொள்கையில் மாற்றமடைந்துள்ள இரண்டாம் குடியரசு யாப்பினை மீண்டும் திருத்தம் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது இதுவரை காலமும் இடம் பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு நாட்டுக்கு பொருந்தும் விதத்திலான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். ஜனாதிபதி முறைமை, நிறைவேற்றுத்துறை க்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரங்கள், தேர்தல் முறைமை மற்றும் சமூகத்தில் புரையோடிபோயுள்ள அதிகார பகிர்வு தொடர்பான விவாதங்கள் ஆகியவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.

பெயரளவில் சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்கள் திருத்தியமைக்கப்பட்டு உண்மையான சுயாதீனத்தன்மை ஆணைக்குழுக்களுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்படும். நாட்டுக்கும், மக்களுக்கும் பொருந்தும் வித்திலான அரசியலமைப்பு புதிய அரசாங்கத்தில் முதல் காலாண்டுக்குள் நிச்சயம் உருவாக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆதரவு இன்றியமையாததாகும் சிறுபான்மையின மக்களை பொதுஜன பெரமுன புறக்கணித்து செயற்படுவதாக சர்வதேச மட்டத்தில் குறிப்பிடப்படும் கருத்து தவறானது. பொதுஜன பெரமுன ஒரு இனத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்படவில்லை. அனைத்து இன மக்களும் இணைந்துக் கொள்ளலாம் என ஆரம்பத்தில் இருந்து அழைப்பு விடுத்தோம். இருப்பினும் ஒரு சில தவறான புரிதல்கள், மற்றும் சித்தரிப்புக்கள் தொடர்ந்து இடைவெளி தன்மையினை காட்டுகின்றது.

தவறுகளை தீருத்திக் கொண்டு தமிழ்- முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்நாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவும் இனங்களை இலக்குப்படுத்தி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவில்லை. பொதுத்தேர்தலில் தமிழ் முஸ்லிம் ம்ககளின் ஆதரவு பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய அரசாங்கத்தில் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை அமைச்சரவையிலும் வழங்கப்படும்.

தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதம் ஆகியவற்றுக்கு மாத்திரமே நாங்கள் எதிரானவர்கள். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் எத்தரப்பினருடனும் கூட்டணியமைக்கமாட்டோம். பொதுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பலமான அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிப்போம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 130 தொடக்கம் 140 வரையான ஆனசங்களை நிச்சயம் கைப்பற்றும் 150 ஆசனங்களை முழுமையாக கைப்பற்றுவதே எங்களின் இறுதிவரையான முயற்சியாகும். 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மொட்டு சின்னம் வெற்றிப்பெறும் யாழ் மாவட்டத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. இருப்பினும் கூட்டணியின் ஊடாக வெற்றிப்பெற்று தமிழ் மக்களின் ஆதரவையும் இம்முறை பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு, வன்னி, மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அமோக வெற்றிப்பெறும். கிழக்கு மாகாணத்தில் 4 ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம். அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மாத்திரமே அதிக போட்டித்தன்மை காணப்படுகிறது. ஏனைய எந்த மாகாணத்திலும், மாவட்டத்திலும் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித போட்டியும் கிடையாதுஃ

ஐக்கிய தேசிய கட்சி இம்முறை நான்கு ஆசனங்களை கூட கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. யானை சின்னம் ஒரு மாவட்டத்தை கூட முழுமையாக கைப்பற்றாது. ஐக்கிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுன பெறும் மொத்த வாக்கில் கால் பங்கினை பெறும் பொதுத்தேர்தலின் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் இருப்பினை தீர்மானிக்கும்.

பொதுத்தேர்தலின் முடிவுகள் அனைத்தும் பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாகவே அமையும். எதிர்க்கட்சி பதவியை எந்த கட்சி பெறும் என்பதே எமக்கு உள்ள பாரிய பிரச்சினை எதிர்க்கட்சி பதவி வகிக்க கூட தேர்தலில் போட்டியிடும் எதிர்கடக்சிகளுக்கு மக்களாணை கிடைக்காது என்றார்.