Mai 1, 2024

தலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு!

தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடா நிதியை துஸ்பிரயோகம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு கனடாவிலிருந்து நிதி ஏதும் தரப்படவில்லையென மறுதலித்துள்ளதுடன் கட்சியிலிருந்து விமலேஸ்வரியை நீக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
அரச தரப்பிலிருந்து கூட்டமைப்பிற்குள் ஊடுருவல் நடந்துள்ளதாகவும் பெருமளவு பணம் அள்ளி வீசப்படுவதாகவும் அப்பின்னணியிலேயே விமலேஸ்வரி தன் மீது சேறுபூசுவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவருடன் இணைந்து செயற்பட்டவரே விமலேஸ்வரி என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அவரை தூண்டிவிட்டேன தனக்கெதிராக பிரச்சாரம் முடுக்கவிடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
விமலேஸ்வரி கடந்த காலத்தில் அரச கட்சியின் முகவராக தொழிற்பட்டவர் என்ற அடிப்படையிலும் தன்மீதான பொய் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து உறுப்புரிமையில் இருந்து நீக்கவேண்டும் என தானும் ஆதரவாளர்களும் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கோரியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.