Mai 6, 2024

சசிகலா ரவிராஜிற்கு ஆதரவு கோரும் மாவை….!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜிற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதியின், தொகுதிக் கிளை மற்றும் மூல கிளை பதவிநிலை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.வி.கே சிவஞானம் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சசிகலா ரவிராஜிற்கான அழைப்பு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் விடுக்கப்பட்டிருந்தது.

கட்சி உறுப்பினர்கள் யாவரும் தாமும் ஒரு வேட்ப்பாளர் என நினைத்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இதன்போது சி.வி.கே சிவஞானம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும்படி வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளையும் அனுசரணைகளையும் தேவையேற்படின் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மாவை சேனாதிராஜா உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சசிகலா ரவிராஜ், சகலரும் கட்சியின் வெற்றிக்காக உழைக்து, அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அத்துடன் பெண் வேட்பாளர் என்ற ரீதியில் தனக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிப்பதுடன் பெண்கள் அனைவரும் ஒரு அணியில் திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.