Mai 6, 2024

எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார்! இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களை பெறும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலை விடவும் இம்முறை 20 ஆசனங்களை பெறும்.

தமிழ் பேசும் மக்கள் வாக்குகளை பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை காட்ட வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கான சரியான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

இதையெல்லாம் எல்லாத் தலைவர்களும் அதாவது மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறிசேன ஆகிய தலைவர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே இம்முறை எந்த அரசாங்கம் வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார். கடந்த காலங்களில் நான் ஏற்கனவே கூறிய அரசியல் தலைவர்கள் உறுதிமொழி தந்துள்ளார்கள்.

புதிய சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என அனைத்தும் பதிவில் உள்ளன. சர்வதேச நாடுகளிடம் இது பதிவில் உள்ளது.

ஆகையால் இவர்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் நமக்கு சரியான தீர்வை தரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.