Mai 6, 2024

சர்வதேச குற்றம் இழைத்தவர் ஸ்ரீலங்காவை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலை…

இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும். இதற்கான பொறுப்பு மக்களாகிய உங்களிடம் உள்ளது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை தொல்புரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

இராணுவத்தை சிவில் நிர்வாகத்தில் நியமிப்பது ஏற்புடைய விடயம் அல்ல.சர்வதேச குற்றம் இழைத்தவர் நாட்டை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்குள் நாங்கள் இருக்கின்றோம். இத்தகைய நிலையில் எமது பிரதிநிதித்துவம் அதிகமாக கிடைக்க கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்காக செயற்படும் கட்சி ஆகையால் தான் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் மக்களுக்காகத்தான் வேலை செய்பவர்கள். ஏனையவர்களைப் போல் சமூக விரோத செயலில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் அல்ல, மக்களுக்காக போராடியதால் தான் சிறை சென்றவன்.

மக்களுக்காக செயலாற்றுகிறவர்கள் தான் எம்முடன் இருக்கிறார்கள். எனவே நாங்கள் எமது தேசிய விடுதலையை அடைய கூட்டமைப்புக்கு மக்களாகிய நீங்கள் வாக்களித்து வெற்றியடைய வைக்கவேண்டும்.

இன்று உங்களைச் சந்திப்பது தேர்தலுக்கான கூட்டமல்ல. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பத்துப்பேரை வேட்பாளர்களாக நியமித்துள்ளோம். உங்களுக்கு உங்கள் பிரதேசத்தில் செயற்படுகின்ற மூவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார்.