Mai 19, 2024

இலங்கையில் மருத்துவத்துறை ஆபத்தில்!

இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக பல மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகூட சோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த எட்டு மாதங்களாக தொழிற்சங்கங்கள் மருத்துவமனை அமைப்பிலுள்ள சுகாதார நெருக்கடி குறித்து பலமுறை எச்சரித்ததாகவும், நிலைமையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு தலையிட வேண்டும் எனவும் சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சு இது தொடர்பான வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்தத் தவறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக பல பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சைகளை நிறுத்தக் கோரி பல்வேறு கடிதங்களை வழங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு கோரி கடிதம் வெளியிடப்பட்டதுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகூட பரிசோதனைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவமனை பணிப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கும், சுகாதார அமைச்சு மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதற்கும் இந்தக் கடிதங்கள் ஓர் அறிகுறியாகும்.

வேறு வழியின்றி பணிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு கூறியது நகைச்சுவையானது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையை பேரழிவாகக் கருதி அதற்கேற்ப நிர்வகிக்க வேண்டும்.

நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் பேரிடர் முகாமைக்கு உடனடி முடிவுகள் தேவை என்றும், சுகாதார செயலாளர் இந்த நோக்கத்திற்காக அடிக்கடி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் , சுகாதார செயலாளரை சந்திப்பது கடினம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் முடிவுகளை எட்ட முடியாது என்றும் அவர் கூறினார்.

நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் கூட்டு முடிவுகளை எட்டுவதற்கு ஒவ்வொரு வாரமும் கூடும் பிரிவுகளைக் கொண்ட விசேட குழுவை சுகாதார அமைச்சு நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மருத்துவமனை பணிப்பாளர்கள் தன்னிச்சையாகச் செயற்படுவதும், பற்றாக்குறையால் மருத்துவமனை நிறுத்தப்படும் நிலையும் ஏற்படும்.

சில செயற்பாடுகளை நிறுத்துவது தொடர்பாக கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில், எழுத்து மூலம் அறிவிக்கப்படாமல் வேறு சில சேவைகளும் நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் நெருக்கடிகள் இருந்தபோதிலும் சுகாதாரத் துறையை கடுமையான முறையில் நிர்வகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert