Mai 18, 2024

தடையை தூக்கி வீசு: வவுனியா, யாழில் போராட்டங்கள்!

 

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு, வவுனியா மற்றும் யாழ்.மத்திய பேருந்து நிலையங்கள் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில், போராட்ட இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்தனர்.

எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.

எவ்வாறாயினும் போராட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் உறவுகள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் அதேபோன்று காவல்துறை  நீதிமன்றத் தடை உத்தரவை கையளிக்க முற்பட்ட போதும் போராட்டகாரர்கள் தனை ஏற்கவில்லை.