April 28, 2024

யாழில் பல மணிநேரமாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை-இரவிரவாக குவிக்கப்பட்ட அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தொடர்ச்சியாக பல மணிநேரம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு,  பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்று பிற்பகல் கற்கோவளம் புனிதநகர் பகுதியில் போதையில் ஒரு சிலர் சண்டித்தனத்தில் ஈடுபட்தாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள சிலர் அவர்களை தமது வீட்டிற்கு முன்னால் நின்று சத்தம் போட வேண்டாம் என்று தெரிவித்ததை அடுத்து குறித்த நபர்கள் பிற இடங்களில் இருந்தும் அவ்வூரிலிருந்தும் வாள் வெட்டு குழுக்களை அழைத்து வீடுகள் கதவுகள், கார்கள் உந்துருளிகள் உட்பட ஐந்து வீடுகளை சேதமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து இதுவரை பருத்தித்துறை காவல்துறையால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், தொடர்ந்தும் அப்பகுதியில் பருத்தித்துறை காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் இராணுவம், சிறப்பு அதிரடி படை குவிக்கப்பட்டே வாள் வெட்டு குழுக்கள் அடக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமது கிராமத்தில் கஞ்சா கள்ளமண், கசிப்பு உட்பட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களே இவ்வாறு வாள் வெட்டிலும் சண்டித்தனத்திலும் ஈடிபடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் வாள் வெட்டுக் குழுக்கள் வந்தபோது தாம் ஓடி ஒழித்துள்ள நிலையிலேயே தம்மை காப்பாற்றி கொண்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.