Mai 5, 2024

ஆபத்தான பட்டியலில் இலங்கை உள்ளிட்ட 15 நாடுகள்! கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஹாங்காங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பங்களாதேஷ், கம்போடியா, பிரான்ஸ், கிரீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின், இலங்கை, சுவிட்சர்லாந்து, தான்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாகளுக்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய தரவுகளின் படி, 15 நாடுகளில் இருந்து ஹாங்காங்கில் நுழையும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் அனைத்தும் „அதிக ஆபத்து“ என்று கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு, குறுகிய காலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையில் கடுமையான அதிகரிப்பு இருப்பதாக அரசாங்கம் கூறியது.

மேலும், இந்த புதிய பயண ஆலோசனை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.