Mai 8, 2024

அமைச்சரை மாற்றி கொரோனாவை கட்டுப்படுத்த திட்டம்!

சுகாதார அமைச்சர் என்ற ரீதியில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு தீர்வு காண, சுகாதார அமைச்சு உட்பட சுகாதாரத் துறையை வழிநடத்த பவித்ரா வன்னியாராச்சி தவறியுள்ளார்.இந்நிலையில், மிக விரைவில் சுகாதார அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக தற்போதைய அமைச்சரவையில் இருந்து தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், இதன்படி, புதிய சுகாதார அமைச்சராக ரமேஸ் பத்திரண நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சுகாதார அமைச்சு விரைவாக ரெப்பிட் பீசிஆர் பரிசோதனை இயந்திரங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெற்ற விலைமனுகோரல் செயற்பாட்டை இன்னும் தாமதப்படுத்தி இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்வதை சுகாதார அமைச்சு தாமதப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு நெருங்கிய ஒரு தரப்பு இலாபகரமான விதத்தில் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்காக இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்துமாறு வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.