Mai 6, 2024

செம்மணி பகுதியில் இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் கொடப்படுவதனை கண்டித்து நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மயானத்தில் பெரும் கிடங்கு வெட்டி அதனுள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. அதன் மேல் உக்கக்கூடிய கழிவுகளை கொட்டி கிடங்கு மூடப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர் , சக உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் அறிந்து அவற்றினை பார்வையிட்டனர்.

எந்தவித அனுமதிகளும் பெறப்படாது சட்டவிரோதமான முறையில் சமூகப்பொறுப்பற்ற வகையில் இந்த செயற்பாடு தொடர்பில் தமது கடும் கண்டனத்தை தெரிவித்து, யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 நெடுஞ்சாலையை மறித்து சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி போராட்டத்தை முன்னெடுக்க கோரினார். அதன் பின்னர் வீதியோரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.