Mai 6, 2024

விடுதலைப்புலிகள் அமைப்பு கொடிய பயங்கரவாதம் எனக் கூறிய மஹிந்த மீது கடும் கேள்விக்கணைகளை தொடுத்த சிவாஜிலிங்கம்..!

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் கொடிய பயங்கரவாதியாக இருந்தால் ஏன் 2005 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்பினீர்கள்.

அத்தோடு கடந்த 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தார்.

எனவே அவர் கொடிய பயங்கரவாதி என்றால் இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனை பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.