April 27, 2024

விக்னேஸ்வரனுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள ஆனந்த சங்கரி…..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் அதற்கான அழைப்பினை இன்றும் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு மரியாதை கெடுவதை விடுத்து எனது கட்சியில் இணைந்தால் தலைவர் பதவியை வழங்க நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே எனது கட்சியில் இணைந்து கொள்வதற்கு இன்றும் அழைப்பு விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பி.ஆனந்தசங்கரியின் 87 ஆவது பிறந்த தினமான இன்று கட்சியின் இணையத்தளமும் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் இளைஞரணி என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது, எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். கட்சிக்கு தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது என விக்னேஸ்வரன் தமது கட்சிக்காக நிதிகோரி இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நடத்தப் போவது சாத்வீகப் போராட்டம். எங்களுக்கும் நிதி தேவையாக உள்ளது நான் இல்லை என்று சொல்லவில்லை. சி.வி.விக்னேஸ்வரனுக்கு என்னுடைய ஆலோசனை இது. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எனது கட்சிக்காக நான் விக்னேஸ்வரனிடம் அழைப்பை விடுகின்றேன் இப்பொழுது வந்து இந்த கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.

அதைவிடுத்து நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் களமிறங்கும் யாராவது இங்கு வந்து இருந்தால் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.