Oktober 23, 2024

சீனாவுக்கு தீவுகள்:மோடி – கோத்தா பேசினர்?

யாழ்.குடா நாட்டில் மூன்று தீவுகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் மோடி கோத்தாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனம் ஒன்றுக்கு யாழ்.குடா நாட்டில் உள்ள மூன்று தீவுகளை வழங்க கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் மோடி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

நெடுந்தீவு, நாயினாதீவு மற்றும் அனல்தீவு ஆகியவற்றில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனத்திற்கு இடமளித்தமை குறித்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தொலைவில் இருக்கும் தீவுகளை சீனாவுக்கு வழங்குவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூறியுள்ளது.

எனினும் உரிய விலை மனு கோரலின் அடிப்படையிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

வெளிநாடுகளில் முதலீடுகளை செய்யும் சீன நிறுவனங்கள் அனைத்து அந்நாட்டின் அரச நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவ்விவகாரங்களை கையாள தெரியாத கையாலாக நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சு உள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.