அரியநேத்திரன் கொழும்பில் !

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து வடகிழக்கினை தாண்டி தலைநகர் கொழும்பில் இன்று புதன்கிழமை பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
பம்பலப்பிட்டியில் விசேட பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வர் உட்பட பலர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை பொதுவேட்பாளரிற்கான ஆதரவு கோரும் இறுதி பிரச்சாரக்கூட்டம் நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று மாலை நடைபெற்றிருந்தது.
எனினும் பிரச்சார கூட்டத்தில் பங்கெடுப்பதாக உறுதியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இதனிடையே தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் இன்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பரப்புரையில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் அவ்வாறு பரப்புரையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட சிலரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
அந்தவகையில் அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
அவர்களது சட்டத்தரணிகள், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதும் புறக்கணிக்கக் கோருவதும் சட்ட விரோதம் ஆகாது என்று நீதிமன்றில் வாதிட்டனர்.
அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் ஏனைய சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்படாது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.