Oktober 23, 2024

ஊடகவியலாளருக்கும் தடை?

ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வதற்கு எதிராகத் தடை உத்தரவுகள் வருகின்றன

என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்து இலங்கை காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தடை அறிவிப்பு தொடர்பில் அறிவிப்புக்கள் பல்வேறு பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் என்பவருக்கும்  நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவொன்று வழங்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளருக்கு வழங்கப்பட்ட அச்சுறுத்தல்  ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதையும் ஊடகவியலாளர்கள் மீது இலங்கை காவல்துறை முன்னெடுக்கின்ற கெடுபிடிகளை தடுத்துமாறு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.