Oktober 23, 2024

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளபட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 62 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 39 பேருக்கு தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று நடைபெற்றது. இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றன.

இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 9 பேரும் மேலும் 13 பேரும் கைது செய்யப்பட்டதோடு, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் இரண்டாயிரத்து நாற்பது மில்லி லீட்டர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும், முன்னூறு மில்லி லீட்டர் தடைசெய்யப்பட்ட சாராயம் வைத்திருந்த குற்றத்தில் ஒருவரும், ஆயிரத்து ஐந்நூற்றி எழுபத்தி ஒன்பது கிராம் கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் பெண் ஒருவரும்,மூவாயிரத்து முன்னூற்றி இருபது மில்லிக்கிராம் கெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றத்தில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாண பிராந்திய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 13 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மது போதையில் சாரத்தியம் செய்த 15 சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சுற்றிவளைப்பு கைது நடவடிக்கையில் யாழ் பிராந்தியத்தில் 62 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வீதி விதி முறைகளை மீறிய குற்றத்தில் 39 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 180 க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.