Mai 4, 2024

6 ஆம் திகதி இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றிரவு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் தவிரந்த ஏனைய மாவட்டங்களில், ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை முன்னர் அறிவிக்கப்பட்ட வகையில் அமுல்படுத்தப்படுகிறது.

அந்த மாவட்டங்களில் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கை எதிர்வரும் 11 திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட, இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட வேண்டும்.

சேவைகளின் தேவையை கவனத்திற்கொண்டு அதற்குத் தேவையான திட்டங்களை இப்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை திறந்து, பணிகளை மேற்கொள்ளும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களை, முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்தல் வேண்டும்.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு யாரை அழைப்பது என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரம் முற்பகல் 10 மணி என உத்தரவிடப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, மக்கள் அவசியமற்ற முறையில் வீதிகளுக்கு பிரவேசித்தல் மற்றும் ஏனைய இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிகள் போக்குவரத்து, தொழிலுக்காக செல்வோருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும்.

இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.