முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் !
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/06/mullai-1024x683.jpg)
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்றைய தினமும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தின் ஈடுபட்டவர்கள் “சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா சபையில் எமது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நட்டஈடும் கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகளில் மக்களை விரட்டுகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர் ஊடகாவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்தும் மக்களை மிரட்டுகின்றார்கள்.
இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச பதிவுகளும் உதவிகளும் தரமுடியாது என்று பயங்கரமான மிரட்டல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்க வேண்டும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றி நீதி கிடைக்க வேண்டும் என்றும் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்றுதான் போராடி வருகின்றோம் எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும்தான் தரவேண்டும் என்றும், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.