பேர்லினில் உச்சம் பெற்ற விவசாயிகளின் போராட்டம்
ஜேர்மனி விவசாயிகள் இன்று திங்கட்கிழமை பெர்லின் நகரின் புகழ்பெற்ற பிராண்டன்பேர்க் நுழைவாயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒன்றுகூடினர்.
விவசாய நடவடிக்கைகளுக்கான வரியை உயர்த்தும் திட்டம் குறித்து முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஜேர்மனி முழுவதிலுமிருந்து 5,000 உழவூர்திகள் மற்றும் பாரவூர்திகளுடன் சுமார் 10,000 விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜேர்மனியின் நிதி மந்திரி கிறிஸ்டியன் லிண்ட்னர் பிராண்டன்பர்க் கேட் வெளியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் முன்னிலையில் மேடைக்கு வந்தார்.
கூட்டாட்சி பட்ஜெட்டில் இருந்து கூடுதல் மாநில உதவிகளை நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது என்று லிண்ட்னர் கூட்டத்தில் கூறினார். ஆனால் நீங்கள் அதிக சுதந்திரத்தையும் உங்கள் பணிக்கு மரியாதையையும் அனுபவிக்க நாங்கள் ஒன்றாகப் போராடலாம் என்றார்.
எங்களிடம் வரத் தயாராக இருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதி மீதும் எனக்கு மரியாதை உண்டு என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ஜோகிம் ருக்வீட் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரின் வருகையால் விவசாயிகள் மகிழ்ச்சியடையவில்லை. சில எதிர்ப்பாளர்கள் அவரைப் பார்த்து „பொய்யர்“ என்று கோசங்களை எழுப்பினர். விவசாயிகள் இந்த அரசாங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
என்னைப் பொறுத்தவரை, அரசாங்கம் பதவி விலக வேண்டும் செஅவர்களால் இனி எங்களை வழிநடத்த முடியாது“என்று பெர்லினின் தென்கிழக்கில் உள்ள பால் பண்ணை விவசாயியான 73 வயதான பால் ப்ரெஜின்ஸ்கி பிரெஞ்சு செய்தி நிறுவனமான AFP இடம் கூறினார்.
விவசாயிகள் போராட்டம் ஏன்?
இன்றைய பேரணியானது ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டங்களின் உச்சகட்டமாகும். விவசாயிகள் நகரங்களுக்கு வெளியே நெடுஞ்சாலை நுழைவாயில்களை அடைத்தும் அவற்றுள் முக்கியப் பாதைகள் விவசாயிகள் அடைத்துப் போராட்டத்தை நடத்தினர்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள விவசாய டீசல் மீதான வரிச் சலுகையை படிப்படியாகக் குறைக்கும் அரசாங்கத் திட்டமே சர்ச்சையின் மையமாகும்.
ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த மானியங்களை ஒரேயடியாக ஒழிப்பதற்குப் பதிலாக, படிப்படியாக அந்த மானியங்களை அகற்றுவதாக பெர்லின் கூறுகிறது.
மற்ற சலுகைகளில், விவசாயிகளுக்கான மோட்டார் வாகன வரி விலக்கு மற்றும் புதிய வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டு இரத்து செய்துள்ளது.