Oktober 23, 2024

புதைகுழி அகழ்விற்கு ரேடர்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ரேடரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (21) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த பொலித்தீன் உறைகள் , உடல் எச்சங்களுக்கு மேற்பகுதியில் காணப்பட்ட மண்கள் அகற்றும் பணியானது நேற்றையதினம் (20) உத்தியோக பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம்(21) காலை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த முறை அகழ்வுபணி நடைபெறும்போது, ரேடர் கருவியை அனுமதியுடன் பரீட்சித்து பார்க்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் மூலம் எந்தளவு தூரத்திற்கு குறித்த புதைகுழி உள்ளது என்பதை அடையாளப்படுத்தி கொள்ளமுடியும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அகழ்வு பணிகளுக்கான 2.5 மில்லியன் ரூபா வரையிலான நிதி இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும் அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert