தமிழரசு சண்டை உச்சம்:கைதுகள் ஆரம்பம்!
![](http://eelattamilan.stsstudio.com/wp-content/uploads/2024/06/tna.jpg)
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிறீதரன் ஆதரவு தரப்பிற்கும் சுமந்திரன் ஆதரவு தரப்பிற்குமிடையிலான மோதல் ஆட்களை கைது செய்யும் நிலையை அடைந்துள்ளது.
உட்கட்சி மோதல் வழக்குத் தொடர்பில் தமது இலத்திரனியல் பத்திரிகையில் வெளியிட்ட செய்தி தொடர்பாக நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி பிரமுகரான அகிலன் முத்துக்குமாரசாமி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் மன்றில் பிரசன்னமாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்குத் தொடர்பில் வெளியிட்ட செய்தி தொடர்பாகவும் குற்றம் சுமத்தப்பட்ட அகிலன் முத்துக்குமாரசாமியின் வழக்கு இன்று) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வேளியிடப்பட்ட செய்தி முழுமையாக தம்முடையதுதான் என்று அகிலன் முத்துக்குமாரசாமி ஏற்றுக்கொள்கின்றமையால், அவரைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை எழவில்லை என்று நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை சுமத்தும் எதிராளியான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிரான பிடியாணை நடைமுறையில் உள்ளமையால் மன்றில் உரிய பிணைகளைச் சமர்ப்பித்து அனுமதி பெற்ற பின்னர் அவர் வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அகிலன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.