Oktober 23, 2024

எனது கணவனை காட்டுங்கள்:கோத்தாவிற்கு சவால்!

பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய சனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள் சனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி  தம்பிராசா செல்வராணி சவால் விடுத்துள்ளார்.  இன்று ஞாயிற்றுக்கிழமை (31) நண்பகல் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ள  தற்போதைய ஜனாதிபதி யுத்த காலத்தில்  கோட்டாபய ராஜபக்ச  பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் எனது கணவரை இராணுவத்திடம் ஒப்படைத்தேன். எனது கணவர் எங்கே என்று சொல்ல முடியாத ஜனாதிபதியால் ஆணைக்குழுவை நியமித்து எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு.

கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் எந்த ஒரு தலையிடும் தேவையில்லை என்ற இலங்கை அரசாங்கம் அவசர அவசரமாக ஆணைக்குழுவை நியமித்து நியமித்தது எதற்காக?

உள்ளக பொறிமுறை என்பது தேவையற்ற ஒன்று எத்தனை ஆணைக்குழுக்கள் வந்தாலும் எமக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.  எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ள மனித உரிமை பேரவைக்கு முன்பு அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக பொறிமுறை  எமக்கு தேவையில்லை.

எமக்கு தேவை சர்வதேசப் பொறிமுறையும் சர்வதேச விசாரணைதான் நீதியை பெற்று தரும்.

சர்வதேசத்தையும் தமிழர்களையும் அடி முட்டாளாக்கும் செயலைத்தான் தற்போது ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

தமிழர்களாகிய எங்களுக்கு நடமாடும் சுதந்திரம் இல்லை இந்த தேசத்தில் வாழக்கூடிய சுதந்திரம் இல்லை. அவ்வாறான எங்களுக்கு சுதந்திர தினம் எதற்கு? நாங்கள் சுதந்திரத்தை பெறவில்லை.  தற்போது வரை எனது வீட்டை சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  நான் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை.  எனது கணவரை ஒப்படைத்த ஜனாதிபதியுடன் எனது கணவர் எங்கே என்று கேட்கின்றேன் என தெரிவித்துள்ளார்.